டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது குறித்த செயல் திட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டியுள்ள இக் கூட்டத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிரஜா ராஜ்ஜியம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா மற்றும் எம்.ஐ.எம். ஆகிய 8 கட்சிகளின் சார்பாக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், ஆந்திர முதல் மந்திரி ரோசய்யாவும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதற்காக, நேற்று காலையில் அவர் டெல்லிக்கு சென்றார். கூட்டத்துக்கு முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருடன் அனைத்து கட்சி கூட்டம் குறித்தும், ஆந்திராவில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார்.
தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் முன்னணி தலைவராக விளங்கும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே டெல்லி சென்று விட்டார்.
தெலுங்கானா தனி மாநிலத்தை தீவிரமாக ஆதரிக்கும் தலைவர்களும், தீவிரமாக எதிர்க்கும் தலைவர்களும் பங்கேற்பதால் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related National News:
தெலுங்கானா... 13 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்!தெலுங்கானா கோரி டிச 30-ல் முழு அடைப்பு!தெலுங்கானா விவகாரம்: பிரதமர் முடிவு இன்று அறிவிப்பு