ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தை பிரித்து தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வலியுறுத்தி புதன்கிழமை (டிசம்பர் 30) முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28,29 ஆகிய இரு நாள்கள் போராட்டம், பேரணியை நடத்தவும், 30-ம் தேதி பந்த் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கைக் குழு தெலங்கானா ஆதரவு போராட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததால் தெலங்கானா பிராந்தியம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டம் தீவிரம் அடைந்தது.
தெலங்கானா பகுதியில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சேர்ந்து பிற கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்குதலை அளிக்க தெலங்கானா பிராந்தியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களை திங்கள்கிழமை சந்தித்த அவர்கள் தங்களது முடிவை தெரிவித்தனர்.
தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் உரிய காலநிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்காதவரை தங்களது ராஜினாமாவை வாபஸ் பெறப்போவதில்லை என்று அவர்கள் வீரப்ப மொய்லியிடம் உறுதிபடத் தெரிவித்தனர்.
Related National News:
ஜன 3-ல் 'சலோ ஹைதராபாத்'!- மாணவர்கள்
ஆந்திர மாநில புதிய கவர்னர் இ எஸ் எல் நரசிம்மன்!
ஜார்கண்ட் முதல்வராக ஷிபுசோரன் டிச 30-ம் தேதி பதவி ஏற்பு