இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள். இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும், இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு மத்திய அரசால் ஆன முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போரினால் இடம் பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் வகையில் இந்திய அரசு ஏற்கெனவே ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது.
அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டும் பணியிலும் மத்திய அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் நீடித்த வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்வதன் மூலம் அங்கு இயல்பான பொருளாதார நிலையை உருவாக்க அரசு முயற்சிக்கும்.
இந்த நிலையில், இலங்கையில் நிலவிவரும் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related Srilanka News:
Peace in Lanka: PM writes to KarunanidhiSrilanka
Tamils: PM writes to Karunanidhi - News in Tamil NaduWe
talked about caste wise census, Pranab about meet with Karunanidhi