இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் உச்சக் கட்ட சண்டை நடந்த போது பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாய் பார்வதி அம்மாள் இருவரும் சிங்களர்களின் தடுப்பு முகாம் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களை அடையாளம் கண்டு தனியாகப் பிரித்த சிங்கள ராணுவ அதிகாரிகள், பிறகு அவர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்திருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார். அதன் பிறகு பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் தனிமையில் இருந்தார்.
அவரை சிவாஜிலிங்கம் எம்.பி. குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இதற்கிடையே பார்வதி அம்மாள் வெளிநாட்டில் உள்ள தன் மகன் அல்லது மகளிடம் சென்று விட விருப்பம் தெரிவித்தார்.
பிரபாகரனின் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் இந்தியா, கனடா, டென்மார்க்கில் வசித்து வருகிறார்கள். இதில் கனடாவில் உள்ள சகோதரி பார்வதி அம்மாளை தன்னுடன் அழைத்துக் கொள்ள தீவிர முயற்சிகள் செய்து வந்தார்.
இதையடுத்து பார்வதி அம்மாளை வெளிநாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசிடம் அனுமதி பெறும் நடவடிக்கைகளை சிவாஜிலிங்கம் மேற்கொண்டார்.
பார்வதி அம்மாளை வெளிநாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பார்வதி அம்மாள் வல்வெட்டி துறையில் இருந்து கொழும்பு அழைத்து வரப்பட்டார். கொழும்பில் பம்பலபிட்டி வெஸ்டர்ன் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று அவர் கொழும்பு காட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். உடல் நலம் இல்லாததால் அவரை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தனர். பிறகு அவர் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் எந்த நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை!
Related Srilanka News:
பிரபாகரன் தாய் இந்தியா செல்ல தடையில்லை!
- ராஜபக்சே
பிரபாகரன் தாயை நான்
பராமரிப்பேன்! - வைகோ